இருதய வலியும் அதற்கான நிவர்த்தியும்.
பதிந்தவர் சுபாஷ் மேல் ஆகஸ்ட் 2, 2008
இருதய வலி ( Angina )
இருதய வலியானது நெஞ்சு வலியின் வகைகளில் ஒன்றாகும். இந்த வலி இருதய தசைகளுக்கு ஒட்சிசன் குறைவாக கிடைப்பதனால் ஏற்படுகிறது. இந்த வலியானது நெஞ்சில் பாரம்போன்று நெஞ்சை அழுத்துவதைப்போன்று இருக்கும். கழுத்துப்பகுதி, கை, தாடைப்பகுதி, முதுகுப்பகுதி, தோள் மூட்டுப்பகுதிகளுக்கு இந்த வலி பரவலடையக்கூடும்.
இருதய வலி பின்வரும் காரணங்களால் ஏற்படுகின்றது.
1. திடீரென இருதயத்திற்கு குருதியை வழங்கும் குழாய்களில் ஏற்படும் சுருக்கம் அல்லது இறுக்கம்.
2. குருதிச்சோகை, இதில் இருதயத்திற்கு செல்லும் குருதியில் குறைந்தளவு ஒட்சிசன் காணப்படுகின்றது.
3. குருதியின் செறிவு கூடுதல்.
4. தைரொயட் சுரப்பிகளின் குறைபாடு.
5. இருதய குருதி குழாய்களின் நோய்கள்.
இருதய குருதி குழாய்களின் நோயானது இருதய நோய்களில் ஒரு வகையாகும். இந்த நோயானது குருதிக்குழாய்களின் உட்சுவரில் மாற்றங்கள் ஏற்படுவதனால் ஏற்படுகிறது.
இருதய குருதி குழாய்களின் நோயானது குருதிக்குழாய்களில் கொழுப்பு படிந்து ஒரு படையை உருவாக்குகின்றது. இந்த கொழுப்புப் படை Plaque என்று அழைக்கப்படுகின்றது. இந்த கொழுப்பு படிப்படியாக தொடர்ந்து படிவது Atheroslerosis எனப்படுகின்றது.
இந்த செயற்பாடு நடைபெறுவதனால் இருதய குருதி குழாய்கள் ஒடுக்கமடைகின்றது. இதனால் இருதயத்திற்கு ஒட்சிசன் செறிவு நிறைந்த குருதி கிடைப்பது குறைகின்றது. இதேவேளை இதய தசையானது கடினமாக வேலை செய்து குருதியை இதயத்திற்கு வழங்குகின்றது. இந்த கொழுப்பு படிவமானது குருதிக் குழாய்களை முற்றாக அடைக்கும்போதுதான் மாரடைப்பு ஏற்படுகின்றது.
இருதய வலியானது மாரடைப்பு ஏற்படுவதற்கு ஒரு முன்னெச்சரிக்கையான இறிகுறியாகும்.
இருதய வலியானது ஆண், பெண் இருபாலாருக்கும் எந்த வயதிலும் ஏற்படக்கூடியது. ஆனால் பொதுவாக இடைத்தர வயதினருக்கே கூடுதலாக ஏற்படுகிறது.
இருதய வலி பொதுவாக ஏற்படும் சந்தர்ப்பங்கள்.
- உயரமான படிக்கட்டுகளில் ஏறும்போது
- மலை உச்சிகளில் ஏறும்போது
- உடற்பயிற்சியில் ஈடுபடும்போது
- கூடுதலாக உணர்ச்சி வசப்படும் நேரங்களில்
- மன அழுத்தம் கூடும்போது
- உடல் உறவின்போது
- குளிரான காற்றினால்
- கூடுதலான அளவு உணவு உட்கொண்ட பின்
இந்த வலியானது ஓய்வாக இருக்கும்போது அல்லது உறக்கத்தின் பொழுதுகூட ஏற்படலாம்.
இருதய வலிக்கான அறிகுறிகள்.
நெஞ்சுவலி பொதுவாக நடுநெஞ்சில் அல்லது இடப்பக்கத்தில் வலி ஏற்படும். இந்த வலி ஐந்து நிமிடங்கள் வரை நீடிக்கலாம்.
நெஞ்சுவலியை விட ஏற்படும் ஏனைய அறிகுறிகள்.
- வயிற்றுவலி – அஜீரணத்தால் அல்லது வயிற்றுப்புண்ணினால் உண்டாகும் வலியைப்போன்றது.
- வாந்தி
- குமட்டல் அல்லது ஓங்காளம்
- தலையிடி
- மூச்சு எடுப்பதில் கஷ்டம்
நெஞ்சுவலி, இருதய வலியால் ஏற்படுகின்றதா? என்பதை எவ்வாறு கண்டறியலாம்?
மருத்துவர் உங்கள் நோய்க்கான அறிகுறிகளை கேட்டு அதற்கேற்ப உடற்பரிசோதனைகளை செய்வார். முக்கியமாக குருதியமுக்கம், இருதயத் துடிப்பு, இருதயம், நுரையீரல், கழுத்துப்பகுதி, வயிற்றுப்பகுதிகளை பரிசோதிப்பதன் மூலம்.
குருதி, சலம் மற்றும் ECG பரிசோதனை Electrocardiogram – இதில் இருதய குழாய்களில் சுருக்கம் அல்லது அடைப்பு இருந்தால் ECG யில் மாற்றங்களை கண்டறியலாம்.
இவற்றைவிட உடற்பயிற்சி செய்யும்போது ECG எடுத்தல் மற்றும் விசேட கதிர் இயக்க முறை மூலம் இருதய குருதிக்குழாய்களை படம் பிடித்து அவற்றில் உள்ள அடைப்பின் தன்மை பற்றி அறியலாம்.
இருதய வலிக்கான சிகிச்சை முறைகள்.
- முக்கியமாக நாளாந்த வாழ்கை முறையை மாற்றியமைக்க வேண்டும். உதாரணமாக, புகைத்தலை நிறுத்துதல், உணவில் உப்புச்சத்தை குறைவாக சேர்த்தல், உடல் நிறையை கட்டுப்படுத்தல், நாளாந்த உடற்பயிற்சி செயடதல், குருதியமுக்கத்தை சரியான அளவில் பேணுதல், குருதியில் சீனியின் அளவு, கொலஸ்ரோல் அளவு என்பவற்றை கட்டுப்பாட்ட்டில் வைத்திருத்தல்.
- மருந்துவகைகள்.
- Nitroglycerin
(நைற்ரோகிளிசரின்)
இந்த மருந்தானது தற்காலிகமாக குருதிக்குழாய்களை விரிவடையச்செய்து இருதயத்திற்கு குருதியை வழங்க துணைபுரிகிறது. - Aspirin (அஸ்பிரின்)
இது குருதி உறைவதை தடுக்கிறது. - சத்திர சிகிச்சை முறை.
இருதய குருதி குழாய்களில் குறிப்பிட்டளவு அடைப்பு இருந்தால் சத்திர சிகிச்சை மூலம் அதை நீக்க முடியும். அது 2 வகைப்படும்.
- Nitroglycerin
i. Ballon Angioplasty
இதில் இருதய குருதி குழாயில் பலுன் பொருத்திய சிறிய கருவியை செலுத்தி குருதிக்குழாய்களில் உள்ள சுருக்கங்களை அகற்றி இரத்த ஓட்டம் சீராக்கப்படும்.
ii. By Pass
இதில் அடைப்பு உள்ள குருதிக்குழாய்க்குப் பதிலாக வேறு ஒரு குருதிக்குழாய் நோயாளியின் உடலில் இருந்து எடுத்து இருதயத்தில் பொருத்துவதன்மூலம் இரத்த ஓட்டம் சீராக்கப்படுகின்றது.
நோயாளியின் வயது, நோயின் தன்மை மற்றும் நோயாளியில் உள்ள ஏனய வருத்தங்கள் என்பவற்றைப் பொறுத்து சிகிச்சை முறையினை வைத்தியர் தீர்மானிப்பார்.
இந்த நோயின் காரணிகளை குறைப்பதற்கு நீங்கள் செய்ய வேண்டியவைகள்
· ஆரோக்கியமான உணவுப்பழக்கத்தை கடைப்பிடித்தல். கொழுப்புச்சத்து கூடிய உணவுகளை தவிர்த்து நார்ச்சத்து கூடிய உணவுகளையும் பழங்களையும் அதிக அளவில் உண்ணுதல்.
· நாளாந்த உடற்பயிற்சி
· புகைத்தலை நிறுத்துதல்
· குருதி அமுக்கத்தை கிரம்மாக அளந்து சரியான அளவில் பேணுதல்
· மன அழுத்தம், கவலைப்படல், கோபம் என்பவற்றை இயன்றளவு குறைத்தல். இதற்கு சுவாசப்பயிற்சி, யோகாசனம் செய்யலாம்.
· அளவுக்கு அதிகமாக மதுபானம் அருந்துவதை நிறுத்தல்
· புதிய நோய் அறிகுறி தென்பட்டால் வைத்திய ஆலோசனை பெறல்
· நெஞ்சுவலி தென்பட்டால் வைத்திய ஆலோசனை பெறல்
· வைத்தியரால் வழங்கப்பட்ட மருந்து வகைகளை தவறாது உட்கொள்ளல்
நன்றி,
Dr. Naven Kumar
பொது வைத்திய நிபுணர்





கோவை விஜய் சொன்னார்
இதயவலியின் காரணமும் நிவர்த்தியும் அருமை
கோவை விஜய்
http://pugaippezhai.blogspot.com/
சுபாஷ் சொன்னார்
தங்களின் மேலான வருகைக்கு நன்றி கோவை விஜய்.
இக்பால் சொன்னார்
அருமையான பதிவு
சுபாஷ் சொன்னார்
தங்களின் மேலான வருகைக்கு நன்றி இக்பால்.